Tuesday, August 31, 2010

உயிரின் நிழலில் படியும் நவீனத்தின் கறை

ஜன்னல் கண்ணாடியும்...
பின் தாழில் தெரியும் கரு நீல ஒளியும்...
அப்பால் பொழியும் ஈரமான பனிக்காற்றும்...


மழையோடும், மரங்களோடும், பனிமூடிக்கிடக்கும் வயலோடும், ஊரின் மஞ்சல் வெய்யிலோடும் வாழ்ந்தவனின் நினைவு இது. என் தாய் இடும் தேனீர் கோப்பை, அரை றாத்தல் பேக்கரிப் பான், குளிர்ந்த கிணற்றுத் தண்ணீர், என் அக்காள்களோடு இடும் சண்டை, இவைகளோடு தொடங்கும் என் காலை.

எங்கள் கிராமங்களில் ஆண்களுக்கென்றும் பெண்களுக்கென்றும் தனியேதான் பாடசாலைகள், நட்பினை கொண்டாட ஆண்களை தவிர பெண்கள் யாரும் கிடையாது, வெறுமையாய் பாடசாலையின் காலை நேரங்கள் கழியும். பாடசாலை அல்லாத விடுமுறை நாட்கள் என்றால் காலையில் மேலதிக வகுப்புக்களில்தான் பெட்டைகளை சந்திப்பது. வாரத்தில் கிடைக்கும் அந்த இரண்டு விடுமுறை நாட்களுமே என் இளமையை களவாடிய பொழுதுகள்தான். அங்கு மேலதிக வகுப்புக்களில் மதியம்வரை அறட்டை அடித்துவிட்டபின், பெட்டைகளின் வீட்டுச் சந்திவரை விட்டு விட்டுத்தான் எங்கள் வீடுகளுக்கே வருவோம்.

மீன் கறியும், இலக்கறி பாலாணமும், சுடுசோறும் என்று மதியச்சாப்பாடு. பின்னர் புழுதி பறக்க தெருவோரம் நன்பர்களோடு கிரிக்கட் விளையாடுவது. எந்த விளையாட்டாக இருந்தாலும் எங்களுக் கென்றே தனிச்சட்டங்கள் இருக்கும். குடுக்கையன் வளவுக்குள், சந்தாங்கேனி மைதானத்தில், கடல்கரை பள்ளி வெளியில், அல்லது தெருவில் அனல் பறக்கும். காலையில் விளையாடுவது என்றால் சற்று தொலைவில் உள்ள தமிழ் ஊர்களுக்கு செல்வது. எப்பொழுது எங்கே விளையாடினாலும் கடைசியில் சண்டையில்தான் முடியும், அல்லது இறுதியில் இரண்டு பேர் பேட்டிங் செய்யாமல் நாளை பார்கலாம் என்று முடியும்.

இரவில் படிப்பதற்க்கு நன்பர்களின் வீடுகளுக்குச் செல்வது. யாருமே இல்லாத வீடாக இருக்க வேண்டுமென்பது கண்டிப்பான சட்டம் என்றால், அங்கே படிப்பதை தவிர மற்ற எல்லாமும் செய்வது கண்டிப்பான வேலை. நள்ளிரவு வரை அரட்டை அடிப்பது, பக்கத்து வீடுகளில் மாங்காய் இளநீர் களவாடுவது, ராத்திரியில் கடல்கரை மணலில் போய் தூங்குவது, அல்லது இப்படிப் படிக்கும் நண்பர்களின் வீடுகளுக்குச் சென்று அரட்டை அடிப்பது.

என் உயர்தர இறுதிப் பரீட்ச்சை முடிந்தபின் அணுராதபுரத்தில் இருக்கும் நன்பனின் வீட்டுக்குச் செல்வதாக சொல்லிவிட்டு ஜந்து நாட்கள் இலங்கையின் மலைநாடு, தென்பகுதி என்று நகரூந்தில் சுற்றித்திரிந்து உம்மாவிடம் மாட்டிக் கொண்ட நாட்கள் எல்லாம் இன்றுவரையிலும் பசுமையாய்தான் உள்ளது. இங்கு வருவதற்க்கு ஒரு மாதத்திக்கு முன், சுதந்திரத்தின் எல்லைமீறி இலங்கையின் சில பகுதிகளுக்கு சுற்றிய நினைவுகளின் எச்சம்தான், என் நினைவுகள் சென்ற பாதை வழியே செல்வது, என் ஏகாந்தத்தின் சிதரல் நடு இரவுவரை விழித்திருக்கும் போது கண்ணீரும் மெல்லிய புண்ணகையும் முட்டி நிற்பது, இவை எல்லாமும் மீண்டுவர மனம் தகிப்பது.

என் ஊர்க் கவிஞன் சோலைக்கிளி என்று பெயர் ஒரு புத்தகத்திற்கு முன்னுரை எழுதியதில் ஒரு பகுதி இப்படி வணப்பாய்த் தொடங்கும்:

“நாம் றொட்டியும் சம்பலும் சாப்பிடுபவர்கள் அல்லவே! தயிரும் வாழைப்பழமும் போட்டு சோறு கரைத்து முழங்கையால் ஒழுகுவதைக் கூட நக்கிச் சுவைப்பவர்கள். அதன் ரசமும் ருசியும் நமக்குத்தான் தெரியும். திராய்ச் சுண்டலுடன் சோற்றை கமுகம் பட்டைக்குள் கட்டிவைத்து சிறுது நேரத்தின் பின் அவிழ்த்துச் சாப்பிட்டவன் நம் ஊரான். அதன் மனத்தில் மகிழ்ந்தவன். இவையெல்லாம் எதைக்காட்டுகின்றன? இயற்கையிலே லயித்து வாழ்ந்திருக்கிறான் எமது மண்ணின் மகன் என்பதையல்லவா? அதன் லயிப்பு நமக்குத் தேவையில்லையா? நாமென்ன பெயர் தெரியாத “ஹறாம்” குட்டிகளா? எவனெவனின் சாயலில்லெல்லாம் சிக்கிச் சீரழிய” என்று காட்டமாயும் அது முடியும்.

மழை பொழியும் மாரி காலத்தில் இரவுகளில் மெழுகுதிரி பற்றவைத்துக் கொண்டு மின்னலையும் அதில் தெறிக்கும் மழையின் குளிர்மையையும் அனுபவித்த நாட்களில் முடிகிறது என் நினைவு. என் ஈழத்தில் இருப்பவர்களும், என்னைப் போல் உலகம் பூராவும் சிதறி வாழ்கிறவர்களும், எங்கள் வாழ்வு முறையை, என் ஈழத்தின் வணப்பை, இந்த இயற்கையை, இந்த மண்ணை லயித்து வாழ்கிறோம் என்பதிலிருந்து தொடங்குகிறது நவீணத்தின் கறை.

இங்கு வெளிநாடொன்றில் தஞ்சம் அடைந்து சுமாராக ஒன்றரை வருடங்கள் கழிந்துவிட்டபின்னும், என் மனமும் ஆண்மாவும் இன்றளவிலும் ஆறாத துயரின் பாடலை தொடர்ந்து பாடியவண்ணமே இருப்பதன் காரணம், இங்குள்ள வாழ்வுமுறை நான் வாழ்ந்து பளகிய வாழ்வுமுறைக்கு முற்றிலும் வேறானவொன்றாய் இருப்பதனாலேயே, இங்கு சுற்றி இருப்பவை எல்லாமே என் ஆண்மாவோடு முறன்பட்டு இருப்பதனாலேயே.

இங்கு பச்சை நிறத்திலான வயல்கள் இல்லை, வெள்ளை நிறத்திலான மேகங்கள் கிடையாது, குளிர்மையான காற்று அதை தொடர்ந்துவரும் அடைமழை பெய்து கணநாளாயிற்று, சொந்த உறவுகளின் கொஞ்சலும் இல்லை சாவின் அழுகையும் இல்லை. காலையில் வேலைக்கு செல்வதும், மாலையில் சமைத்து சாப்பிட்டுவிட்டு தூங்கிக் கிடப்பதும், பின் மீண்டும் வேலைக்கு செல்வதும் என்று தொடர்கிறது நாட்கள்.

என் குடும்ப சுமையை ஏற்றுக் கொள்ளும் பொருப்பின் உணர்வுதான் இந்த வாழ்வை ஏற்றுக் கொள்ள நிர்பந்திக்கிறது. என் இயலாமைக்கு இந்த நிர்பந்தமே காரணமாகிறது. பொருப்புகள் மனித வரலாற்றில் வழி தொடர்பவைதான், ஆனால் இந்த நிர்பந்தம் யார் சொல்லித் தந்தது, இந்த நிர்பந்தத்தை, நிர்கதியான வாழ்வை எம்முள் திணித்தவன் எவன்.

அரசியல், ஜனநாயகம் என்ற சொற்கள் எல்லாம் இன்று பலகிய வார்தைகளாய் போய் விட்டது, எனினும் அதிகாரம் அங்கெதான் குவிக்கப்பட்டுள்ளது. உலகின் அனைத்து மொழிகளின் செய்திகளும் மனிதப் படுகொலைகள் உயிறிழப்புகள் பற்றியேதான் அதிகமாய் பெசுகின்றன, அரசு ஜனநாயக வழியில் அமைக்கப்படுகிறது, ஆனால் அது உயிறிழப்புகளால்தான் ஜனநாயகம் பெசுகிறது.

பண்டைய நாகரீகங்களில் எதேட்சதிகாரத்தினால் அதிகாரம் பெரப்பட்டது. அதன்போது அப்பாவி மக்களின் உடமை, ரத்தம், உயிர் வகைதொகையின்றி அழிக்கப்பட்டது. காரணம் ஒன்றுதான், எவன் அதீத பலசாலியோ அவனுக்குத்தான் அதிகாரம் சொந்தமானது. இந்த தனிமனித அதீத அதிகார மையத்தினை தகர்த்து மக்களின் கைகளில் அதிகாரம் இருக்கவேண்டும், மக்களே தங்களை ஆழவேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் போறாட்ட குழுக்கள் தோன்றி, பின் அது கட்டமைக்கப்பட்டு நாகரீகமான வழிமுறைகளிலும் ரத்தம்சிந்தியும் போறாடியதன் பிற்பாடுதான் அதிகாரம் மக்கள் மயப்படுத்தப்பட்டது. இதுவொன்றும் பலநூற்றாண்டுளுக்கு முன் நடந்தவையல்ல ஒன்று அல்லது இரண்டு நூற்றாண்டுளுக்குள் நடந்தவை.

“மக்களால் மக்களை ஆழ்வது” இதுதான் அரசியலின் அடிப்படைத் தத்துவம், இதற்காக மக்கள் மன்றங்கள் அமைக்கப்பட்டன, இந்த மன்றங்களில் மக்கள் அனைவரும் சென்ரமற இயலாததன் நடைமுறை சிக்கலில்தான் மக்களின் பிரதிநிதிகள் உருவானார்கள், இவர்களே மக்களின் அபிப்பிராயங்களை தேவைகளை நடைமுறைபடுத்துபவர்கள், இந்த மக்கள் பிரதிநிகளை வழிநடத்தவே முதன்மை பிரதிநிதி அல்லது ஆட்சித் தலைவர் தெரிவுசெய்யப்பட்டார். இந்த சிக்கலில்லாத நடைமுறையில் நீதிதான் அடிப்படை, அதற்காய்தான் சட்டங்கள் ஏற்றப்பட்டன, இந்த சமூக நீதியை பாதுகாப்பதே அரசின் முதல்பனி. இதுவே அரசியல் தத்துவமாகக் கொள்ளப்படுகிறது.

சற்றுச் சிந்தியுங்கள், ஜனநாயக அரசு அமைக்கப்படுவதற்கு முன் இந்த உலகில் தொழில், வர்தகம், நாளாந்த சமூக செயற்பாடுகள் நடக்கவே இல்லையா? மக்கள் அரசு அமைக்கப்பட்டதன் பின்னர்தான் இவையெல்லாமும் உலகில் தோன்றியதா? இது மக்கள் ஆட்சி (The Republic Government) என்று கொட்டை எழுத்தில் தன்னை அடயாளப்படுத்தும் அரசுகளின் இன்றைய பக்கங்கள் ரத்தக்கறை படிந்ததாகவே உள்ளதன் மர்மம் என்ன?

சுதந்திர பாலஸ்தீனத்தில் யூத குடியிருப்பு அமைக்கப்பட்டு இந்த ஆண்டுடன் 72ஆண்டுகள் கழிகிறது. பொஸ்னியா, செச்சின்யா போன்ற நாடுகளில் இனப்படுகொலை செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லெட்சம் என செய்திகள் கசிகிறது. இந்திய அரசும் பாக் அரசும் கஷ்மீர் மக்களை அடிமைப்படுத்தி படுகொலை செய்தவர்களின் எண்ணிக்கை இரண்டு லெட்சத்தை தாண்டுகிறது. அதே இந்திய அரசு மலைவாழ் மக்களின் குடியிருப்பு நிலங்களில் மேலைத் தேய நிறுவனங்கள் என்ற போற்வையில் சொந்த மக்களின் பூர்வீக குடியிருப்புகளில் பெருமுதலாளிகளின் குப்பைகளை கொண்டுபோய் கொட்டுகிறது.

தீவிரவாத எதிர்புப் போர் என்ற தொனியில் அமேரிக்காவின் கைபிள்ளைகளான, பாக் அரசு, அதன் உளவுப்பிரிவு, ஆப்கான் அரசுகளுடன் சேர்ந்துகொண்டு தன் சொந்த மக்களை தீவிரவாத வலைபின்னலில் சிக்கவைத்து, தன் சொந்தச் சகோதரனையே கொலைசெய்து, தன் வல்லாதிக்க வண்மப்புத்தியை அமெரிக்கா நிலைநிறுத்துவதாக அன்மையில் வெளியான விக்கிலீக் சுதந்திர இணையத்தள ஊடகம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து தலிபான் கிளர்சியாளர்களும், ஒசாமாவும் சி.ஐ.ஏ யின் கைக்காசு கொடுக்கப்பட்ட கூலிக்கொலைகாரர்கள் என்று பிடல்கஸ்றோ தற்போது சொல்கிறார். இதேவேளை கற்பழிக்கப்படும் பெண்கள் தொகை அதிகமாக உள்ள நாடுகளின் பட்டியலில் ஆப்கான் முதலில் உள்ளது. இந்த உலகில் பாதுகாப்பற்ற நாடுகளின் முதல் நாடு பாக்கிஸ்தானாக உள்ளது.

ஈராக் யுத்தம், வடகொர்ய தென்கொர்ய எல்லை பிளவு, ஆப்கான் யுத்தம், ஆபிரிக்க இனமுறுவல், பல நாடுகளில் நடக்கும் உள்நாட்டு யுத்தங்கள் இவை அத்தனைக்குமான முழுமுதல் காரணம் அமேரிக்க, யூத, ரஷ்ய, மற்றும் பெறும் செல்வந்த நாடுகளின் ஆயுத உற்பத்தியும் அதனால் கிடைக்கும் கருப்புப் பண முதலைகளுமே. கொங்கோ குடியரசிலும், அதனை சுற்றியுள்ள ஆபிரிக்க நாடுகளில் இடம்பெரும் நாளாந்த மனிதப் படுகொலைக்குமான முக்கிய காரணம் ஐரோப்பிய நாடுகளால் கடத்தப்படும் வெள்ளை வைரக்கற்களே. இந்தப்பட்டியலின் நீளமும் கண்ணீரின் கணமும் அதிகமானது. இவையெல்லாமும் ஜனநாயக அரசுகள் செய்த எதேட்சதிகாரங்கள்தான், அதிகாரமீறல்கள்தான். இவையெல்லாமும் இன்றைய தேதிகளில் வெறும் செய்திகளாய் மாறிவிட்டது.

மேலைத்தேயவனுக்கும் கீழத்தேயவனுக்கும் இடையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளி மூன்று தசாப்தம் என்று ஒரு அறிக்கை சொல்கிறது. இன்னமும் நம் கல்விக் கொள்கைகளில் பழய பிரிடிஷ் காரனின் ஈக்களே பறக்கிறது. நம்மால் தொலைக்கப்பட்ட வரலாறுகளிலிருந்து கற்றுக்கொள்ள நிறையவே பாடங்கள் இருந்தும், நாம் நம்மில் இருக்கும் பிழைகளை துடைத்தழித்து பின்னர், ஒரு புதிய மாற்று அதிகார மீறல்களை உருவாக்கிக் கொண்டும், அதற்காய் ஒரு புதிய நாளினை வரவேற்றுக் கொண்டும் இருக்கிறோம்.

இவைகளை எதிர்த்து குரல் கொடுக்க, காட்டமாய் போராட நம்மில் ஒரு போராளி இல்லை, நம் வாழ்வின் நிர்பந்தம் இதனை தடுக்கிறது. புரிந்துகொள்ளுங்கள் நவீணம் நிர்பந்தங்களால்தான் எங்களை ஆள்கிது.

இங்கே கட்டாரில் நேற்று ஒரு நபரை சந்தித்தேன், வயது முப்பத்தைந்துக்கு மேலிருக்கும் கட்டடநிர்மாணப் பணியில்தான் வேலை என்றும், தற்பொழுது சம்பளம் பரவாயில்லை என்றும் இன்னுமொரு தங்கைக்கு திருமணம் நடந்து விட்டால் தான் நாடு செல்ல இருப்பதாகவும் சொன்னார். உங்களுக்கென்று ஏதாவது சேர்த்திருக்கிறீர்களா என்றேன், இல்லை என்றார். சடுதியாக தனக்கு திருமணம் பேசியுள்ளதாகவும் பெண்வீட்டிலிருந்து சீதணமாக வீடும் கொஞ்சப் பணமும் தருவதாக சொல்லி இருக்கிறார்கள் என்றுவிட்டு இறுதியாக, என் இளமையும் காலமும் இங்கே எத்தனை காலத்திற்கு வீனாய் கழிவது என்று பெருமூச்சுடன் பிரிந்து சென்றுவிட்டார். அவர் யார் என்றோ அவரின் முகவரி என்ன என்றோ எனக்குத் தெரியாது, ஆனால் இவரின் கதைபோல் லட்சோப லட்சம் கதைகள் இன்னும் எழுதப்படாமல் பேசப்படாமல் இங்கே உள்ளது.

இங்கு வருவதற்கு ஓரிரண்டு வருடத்திற்கு முன் ஐக்கிய ராஜ்சியத்தின் நுளைவு அனுமதி பெற்றுத் தருவதற்கு, ஐக்கிய ராஜ்சியத்தின் குடியுரிமை பெற்ற இலங்கையை சேர்ந்த ஒருவரை சந்தித்தேன், இருவரின் பேச்சினிடையில் அவர் சொல்கிறார், இங்க வாழ்க என்ன அங்க வாழ்க என்ன, அது றோயல்டி லைஃப் அப்பா, நீங்களும் றை பன்னுங்க என்றார். என் நன்பனொருவன் லண்டனில் இறுக்கிறான், நாங்கள் பேசும் போது அடிக்கடி அவன் இதனைச் சொல்வான், உழைக்கிறத உழைச்சிட்டு நாட்டுக்கு போகனும்டா மச்சான், இங்க பதினான்கு மணிநேர வேலை கொட்டிற பனியில காலை நான்கு மணிக்கெல்லாம் வேலைக்கு போகனும், நிம்மதி சந்தோஷம் எல்லாம் தொலைஞ்சி அழிஞ்சி போய்சிடா.

இப்போது என் ஊரில் மழைக்காலம் ஆதலால், என் வீட்டுத் தகரக் கொட்டிலில் விழும் சந்தங்களை கேட்டுக் கொண்டே பூனைகள் சில கண்ணயர்ந்திருக்கும். பின்காலையின் வயல்கள் முழுவதும் பனிமூடிக்கிடக்கும். ரசிப்பதர்க்கு மனிதர்கள் இருக்கிறார்களோ என்னமோ. நாளையும் நாளைகழிந்து தொடரும் இறப்புக்களுக்கு நடுவிலும் சின்னத்திரை மெகாத் தொடர்களில் அழுது முந்தானை துடைக்கும் உன் அம்மாவும் என் அக்காளும் நினைவுக்கு வருகிறார்கள் இப்போது, ஏனோ தெரியவில்லை!

-yousuf salman-
(Tuesday31,August2010)